பதிவு செய்த நாள்
25
ஜூன்
2025
04:06
மேட்டுப்பாளையம்; ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஒன்று. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, விசேஷம் மற்றும் அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று ஆனி மாத அமாவாசை முன்னிட்டு கோவில், அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் சுவாமியை வழிபட்டனர். பின்பு பக்காசூரன் சன்னதிக்குச் சென்று வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமி சிலைகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜைகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.