பதிவு செய்த நாள்
25
ஜூன்
2025
04:06
பல்லடம்; பக்தியால், அன்பால், கடவுளையும் கட்டிப் போட்டவர்கள் நம் முன்னோர்கள் என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டின் போது, காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: கோள் என்றால் வினை; பதி என்றால் அறுக்குக்கூடியது. வினைகளை எல்லாம் அறுக்கக்கூடிய கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர், மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது அம்பாளின் அருள்பெற்று பாடினார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டவர் சிவபெருமான். அடியவர்கள் அடித்தாலும் அதை வாங்கிக் கொள்வார். வழி கொடுப்பதும்; வழி காட்டுவதும் அவரே. கடவுளை வணங்கும் நேரத்திலும் கூட மனிதர்களின் மனம் அலை பாய்கிறது. பல மணி நேரம் கோவிலில் காத்திருந்து, ஒரு நொடி இறைவனை தரிசிக்காமல் செல்வதால் பயன் இல்லை. அதற்கும்கூட, இறைவனின் அருள் வேண்டும். சரியான வழியில், சரியான நெறியில் செல்லாவிட்டால் சிக்கல்தான் வரும். ஒருவருக்கு கஷ்டம் வந்துவிட்டால், கடவுள் அவர் அருகே வந்துவிட்டார் என்று அர்த்தம். பக்தியால், அன்பால் கடவுளையே கட்டிப் போட்டவர்கள் நம் முன்னோர்கள். அகத்தின் அழுக்கை சுத்தம் செய்ய இறைவன் நாமம் மட்டுமே உதவும். எந்த சோதனை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை கடவுள் தந்து விட்டால், அதிலிருந்து விடுபடும் வழியும் கிடைத்து விடும். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே. பெயர் வைப்பது முதல், வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் தீர்மானிப்பவர் அவரே. என்ன சோதனை வந்தாலும் அவற்றை சந்திக்கும் தைரியத்தை கடவுள் அனைவருக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நடந்த மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாட்டு நடந்தது. பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால், பக்தர்கள் நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.