பதிவு செய்த நாள்
26
ஜூன்
2025
11:06
மைசூரு; கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை நாளை துவங்குவதால், மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., ஆகியோர் சாமுண்டி மலையில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர்.
கன்னட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளை என்பதால், மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், மைசூரு மாநகராட்சி கமிஷனர் செய்க் தன்வீர் ஆசிப் உட்பட அதிகாரிகள் நேற்று சாமுண்டி மலையில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர். பின், கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி அளித்த பேட்டி: முந்தைய ஆண்டுகள் போன்றே, லலித மஹால் அரண்மனை அருகில் இருந்து சாமுண்டி மலைக்கு இலவசமாக கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படும். இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
வி.ஐ.பி.,க்கள்; வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வி.ஐ.பி.,க்கள் வாகனங்களை தவிர, தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இலவச சுவாமி தரிசனம் தவிர, 300 ரூபாய், 2,000 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம் செய்வோருக்கான சிறப்பு கவுன்டர், லலித மஹால் மைதானத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கென தனி பஸ்கள் இயக்கப்படும். இலவசமாக பஸ்களில் பயணிப்போரின் பஸ்கள், மலையில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படும். 300 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள், வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து சிறிது தள்ளி நிறுத்தப்படுவர். 2,000 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள், மகிசாசுரன் சிலை அருகில் இறக்கி விடப்படுவர். கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, மூன்று தரிசனங்களுக்கு மூன்று வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளன. மலை அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக வரும் பக்தர்களுக்கு, சாமுண்டீஸ்வரி கோவில் ஆணையம் சார்பில் 40 கிராம் எடையில் உலர்ந்த பழங்கள் கொண்ட பாக்கெட், குடிநீர் வழங்கப்படும். இதே சலுகை, இலவச தரிசனத்துக்கு நின்றிருக்கும் பக்தர்களுக்கும் வழங்கப்படும்.
அன்னதானம்; பக்தர்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் பிரசாதம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்காக, சாமுண்டீஸ்வரி கோவில் ஆணையம் சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மகிசாசூரன் சிலை அருகில் ஒரே நேரத்தில், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வி.ஐ.பி.,க்கள் அதிகாலை 5:00 மணி முதல் 10:00 மணிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறுகையில், ‘‘பாதுகாப்புக்காக, 100 ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1,000 போலீசார், நான்கு ரிசர்வ் போலீஸ் பிளாட்டூன்கள், ஒரு பெண்கள் பிளாட்டூன் என 1,700 பேர் பணியில் ஈடுபட்டிருப்பர்,’’ என்றார். கன்னட ஆடி மாதத்தின் நான்கு வெள்ளிக் கிழமைகளிலும், அதிகாலை 5:30 மணிக்கு பூஜைகள் துவங்கும். இரவு 10:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் நிதானமாக சுவாமியை தரிசிக்கலாம். – சசிசேகர் தீக் ஷித்,
தலைமை அர்ச்சகர்; ரீல்ஸ்களுக்கு தடை ஆடி மாதங்களில், கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மொபைல் போன் மூலம் ரீல்ஸ், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. இதை மீறுவோரின் மொபைல் போன்கள், கேமராக்கள் பறிமுதல் செய்யப்படும். அதுபோன்று கோவிலுக்கு வரமுடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக, கோவில் ஆணையம் சார்பில் உற்சவ மூர்த்திக்கு செய்யப்படும் பூஜைகளை நேரடியாக சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் புகைப்படங்களும் வெளியிடப்படும்.
கன்னட ஆடி மாதத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, குங்குமம் பாக்கெட், உலர்ந்த பழங்கள் அடங்கிய பிரசாத பாக்கெட்டை தயார் செய்யும் ஊழியர்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் ஆய்வு செய்தனர்.