பதிவு செய்த நாள்
26
ஜூன்
2025
12:06
கோலார்; சிக்க திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், இம்முறை 57.85 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவில் சிக்க திருப்பதி கோவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில், இதுவும் ஒன்றாகும். ‘கர்நாடக திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலின் வருவாயும் அதிகரிக்கிறது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் உண்டியல் எண்ணப்பட்டது. கோவிலின் அன்னதான பவன் வளாகத்தில், இரவு வரை எண்ணும் பணி நீடித்தது. உண்டியலில் 57.85 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது. 58 கிராம் தங்கம், 509 கிராம் வெள்ளி, பல்வேறு வெளிநாடுகளின் கரென்சிகளும் இருந்தன. உண்டியலில் வேண்டுகோள் அடங்கிய கடிதங்களும் இருந்தன. ஒரு பக்தை, ‘எனக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும். தீய பழக்கங்கள் இல்லாத, என்னிடம் நேர்மையுடன் இருக்கும் கணவர் கிடைக்க அருள்பாலிக்க வேண்டும்’ என, எழுதியிருந்தார். இதுபோன்று, பல வேண்டுதல்கள் கொண்ட கடிதங்கள் இருந்தன.