பதிவு செய்த நாள்
26
ஜூன்
2025
01:06
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே, அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், இன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சி, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம், இன்று காலை நடைபெற்றது. கடந்த 22ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. 23ம் தேதி மகா கணபதி ஹோமமும், விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, முகூர்த்தக்கால் நடப்பட்டது. 24ம் தேதி சின்னதொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று விநாயகர் வழிபாடுடன் கோ பூஜை, ருத்ர பாராயணம், மகா ஹோமம், கலச அபிஷேகம், மகாதீபாரதனை ஆகியவை நடைபெற்றது. இன்று காலை மகா கணபதி வழிபாடுடன், மகா சங்கல்பம், மூலமந்திர மகா யாகம் கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சின்னதொட்டிபாளையம், சேரன் நகர், நீலகிரி நெஸ்ட் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். காலை, 10:45 மணிக்கு மேல், 11:45 மணிக்குள் அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாண கோலத்தில் அமிர்தவர்ஷினி நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற உள்ளது.