சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும். இந்தாண்டிற்கான நிகழ்ச்சி ஜூன் 22 ல் துவங்கியது. திருவிழாவில் 11 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.
ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை ஜூன் 30 ல் நடைபெற்றது. குரு பூஜையை முன்னிட்டு அன்னதானத்தில் முக்கனிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை ஆனித் திருமஞ்சன திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த ஆனித் திருமஞ்சன விழாவில் மூன்று உற்சவர்கள், விநாயகர், சிவகாமியம்மன், நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகருக்கு பிரத்யேகமாக மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதங்களாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா , பரம்பரை அறங்காவலர் திருவாசகம், தமிழாசிரியர்கள் வெங்கடாச்சலம் , வேலு ஆகியோர்கள் செய்திருந்தனர்.