பதிவு செய்த நாள்
03
ஜூலை
2025
12:07
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி நடராஜர் ஆண்டுக்கு இருமுறை எழுந்தருளும் வெள்ளி கஜவாகனம் சேதமுற்றதால் ஆனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று தங்கப்பல்லக்கில் வலம் வந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீனாட்சி அம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழா நடந்து வருகிறது. தமிழ் மாதம் அடிப்படையில் ஒவ்வொரு திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் ஜூலை 8 வரை ஊஞ்சல் உற்ஸவம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி உத்திரமான நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமியம்மனுக்கு இரண்டாம் பிரகாரம் நுாறு கால் மண்டபத்திலும் திருமஞ்சனம் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று காலை நடராஜர் மாசிவீதிகளில் உலா வந்தார். வழக்கமாக ஆனி உத்திரத்தன்று நடராஜர் வெள்ளி கஜவாகனத்தில்தான் வீதி உலா வருவார். ஆனால் நேற்று தங்கப்பல்லக்கில் வலம் வந்தது பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அதாவது மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரத்தன்று மட்டுமே வெள்ளி கஜ வாகனத்தில் நடராஜர் வலம் வருவதை பார்க்க முடியும்.
கோயில் தரப்பில் கூறியதாவது: வெள்ளி கஜவாகனம் லேசாக சேதமடைந்துள்ளது. அதில் நடராஜரை எடுத்துச்செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது என பட்டர்கள் தெரிவித்ததால், தங்கப்பல்லக்கில் வீதி உலா வர ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளி கஜவாகனம் உட்பட சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அதையெல்லாம் மதிப்பீடு செய்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கூறினர்.