பதிவு செய்த நாள்
07
ஜூலை
2025
09:07
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவிலில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமைந்துள்ளது. நவகிரகங்கள் புதன் பகவான், சிவனின் 64 மூர்த்தி பேதங்களும் ஒன்றான அகோர மூர்த்தி ஆகியோர் தனி சன்னதிகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். காசிக்கு சமமான 6 தலங்களில் முதன்மையான தளமாகவும், சக்தி பீடங்களில் 51வது பீடமாகவும் திகழ்கிறது. ஆதி சிதம்பரம் என போற்றப்படும் இத்தலத்தில் சிவபெருமான் 9 தாண்டவங்களை ஆடியுள்ளார். பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலமாகவும் மெய் கண்டார் அவதரித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது.
9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழக அரசு ரூ. 2 கோடியே 5 லட்சம் நிதி, நன்கொடையாளர்கள் அளித்த ரூ 25 கோடி நிதி ஆகியவற்றை கொண்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை துவாதசி திதி அனுசு நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் 10:20க்குள் சரியாக 9:05 மணிக்கு சிம்ம லக்கனத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் மூன்றாம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன. இன்று காலை எட்டாவது கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி, அம்பாள், அகோர மூர்த்தி, புதன் பகவான் சன்னதி விமானங்களை அடைந்தது சரியாக 9:05 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணியளவில் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலின், மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார். பூம்புகார் நிவேதா எம் முருகன் சீர்காழி பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர் தேவாரம், வேத பாராயணம் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.