தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை துவக்கம்
பதிவு செய்த நாள்
16
ஜூலை 2025 11:07
காவல்பைரசந்திரா; பெங்களூரு காவல் பைரசந்திராவில் உள்ள தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை ஆடிக்கிருத்திகை திருவிழா கொடியேற்றதுடன் துவங்குகிறது. பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இந்த மலை நிறுவி, அவர் வணங்கி வந்த வேலை, அனைவரையும் வழிபடத்துவங்கினர். காலப்போக்கில் வேல் அருகில் முருகன், துறவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொட்டண்ணாநகரை சேர்ந்த பக்தர் ஒருவரின், 9 வயது வரை பேசாமல் இருந்த குழந்தையை, ஆடி கிருத்திகை அன்று பேச வைத்தார் தங்கமலை சுப்பிரமணிய சுவாமி. இவரை வணங்கிச் சென்ற பின், பலர் அரசியலில் கோலோச்சி உள்ளனர். தங்கள் கோரிக்கைகளை முருகனிடம் தயக்கமின்றி பக்தர்கள் சொல்வதற்காகவே, வள்ளி, தெய்வானையை சற்று தள்ளியே பிரதிஷ்டை செய்துள்ளனர். மனைவியுடன் நவக்கிரஹங்கள் சன்னிதியும் இங்குள்ளது. தத்துவங்களில் ஒன்றான சைவ சித்தாந்தம் சொல்வது போன்று, 84 லட்சம் பிறப்புகளில் இருந்து விடுபட இக்கோவிலில் 84 படிகளை அமைத்துள்ளனர். படிப்பாதையில் இடும்பன் காவடி எடுக்கும் காட்சியும், அவ்வையாருக்கு அருள் செய்யும் முருகனுடைய சிற்பங்களும் உள்ளன. இவரை தரிசிப்போர் வாழ்வில் பணமும், புகழும் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழாக்கள்; வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பக்தைகள் பங்கேற்பர். நவம்பரில், முருகனின் வேலுக்கு வேல் பூஜை செய்து, ஐந்து நாட்கள் உற்சவம் கொண்டாடப்படுகிறது. இத்தகைய கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா, நாளை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி தலைமையில் மற்றும் அங்கத்தினர்கள் முன்னிலையில், பில்லண்ணா கார்டன் மறைந்த சுந்தரமூர்த்தி, பாஞ்சாலி எனும் சின்னகுழந்தையின் குடும்பத்தினரால் கொடியேற்று வைபவம் நடக்கிறது. ஊர்வலம்; பில்லண்ணா கார்டன் வித்யா விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் புறப்பட்டு, பெரியார்நகர், தேவர்ஜீவனஹள்ளி, தொட்டண்ணா நகர் வழியாக தங்கமலை கோவிலை பக்தர்கள் ஊர்வலம் வந்தடையும். நாளை முதல் ஆக., 18ம் தேதி வரை தினமும் காலை 7:30 முதல் 10:00 மணி வரை விசேஷ ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி உற்சவம், அதை தொடர்ந்து மஹா மங்களாரத்தி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு ஹோமத்திற்கு பெயர்களை முன்பதிவு செய்ய, 99729 99663, 98453 56637, 97383 42151 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி, பொது செயலர் டி.முனேகவுடா, உதவி தலைவர்கள் ஜனார்த்தன், ஆர்.பெருமாள், பொருளாளர் மகேந்திரன், உதவி செயலர்கள் சேகரன், பி.மோகன் ஆகியோர் செய்துள்ளனர்.
|