பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
06:07
பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக மலைக்கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆங்காங்கே நிறுத்தி அனுப்பப்பட்டனர். ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக செயல்படவில்லை. இதனால், வின்ச் ஸ்டேஷனில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அருள்ஜோதி வீதி, குளத்து ரோடு உள்ளிட்ட முக்கிய நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் பழநி பஸ் ஸ்டாண்டில் அதிக பக்தர்கள் பஸ்ஸிற்காக காத்திருந்தனர்.
ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் இலவச பிரசாதம், பஞ்சாமிர்தம், அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்பட்டது. மாலையில் குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர்.