பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
06:07
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார். இக்கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், இம்மாதம் 7ம் தேதி, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த நிலையில், ஆடி கிருத்திகை விழா, இன்று இக்கோவிலில் கோலாகலமாக நடந்தது. காலை 5:00 மணிக்கு, மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கு மண்டல அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவர் ரோஜா மலர்மாலை, எலுமிச்சை மாலை அலங்காரத்திலும், பலவகை பழங்களில் அலங்காரிக்கப்பட்ட சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வீராசன மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் மோர், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.