பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
11:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கத்திற்கு மாறாக இன்று ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதில், 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலர், மயில் மற்றும் பால் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து, பொதுவழியில் ஏழு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மொரீஷியஸ் அமைச்சர் தரிசனம்; மொரீஷியஸ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தர்மராஜன் நாகலிங்கம், குடும்பத்துடன், காலை 8:30 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அமைச்சருக்கு முருகர் திருவுருவ படம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின், காலை 9:20 மணிக்கு புறப்பட்டு சென்றார்.