18 ஆண்டுகளாக பூட்டியே இருந்த கோயிலை மீட்டது அறநிலையத்துறை
பதிவு செய்த நாள்
15
ஆக 2025 07:08
ப.வேலுார்; ப.வேலுார் காசி விஸ்வநாதர் கோவில், 18 ஆண்டுகளாக பூட்டியே இருந்ததால், அறங்காவலர்களை பணி நீக்கம் செய்து, அறநிலைய துறையினர் கோவிலை கையகப்படுத்தினர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில், காவிரிக்கரையோரத்தில் பிரசித்தி பெற்ற, 700 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், 13ம் நுாற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன், பரம்பரை அறங்காவலர்களால் கோவில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், திருப்பணி நடைபெறாமல் கோவில் பூட்டி கிடந்தது. கோவில் அருகிலேயே, சிறிய இடத்தில் வேல் வைத்து வழிபட்டு வருகின்றனர். காசி விஸ்வநாதர் கோவில் பூட்டியே கிடப்பதால், பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில், அறங்காவலர்களான ப.வேலுார் விஸ்வநாதன், சந்திரசேகரன், பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார் ஆகியோரை, காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், காசி விஸ்வநாதர் கோவிலை, அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதை, அதற்குரிய அரசாணையை நோட்டீசாக, உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அலுவலர்கள், காசி விஸ்வநாதர் கோவில் கதவில் ஒட்டினர். பின்பு அறங்காவலர்களை தொடர்பு கொண்டு, கோவில் சாவிகளை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். அதன்படி, கோவிலுக்குரிய அனைத்து சாவிகளையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவில் சாவியை பெற்றுக்கொண்ட உதவி ஆணையர் ரமணிகாந்தன், கோவிலை திறந்து ஆய்வு செய்தார். கோவில் திருப்பணிகள் பாதியிலேயே நின்றபடியும், பராமரிப்பின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோவிலில் இருந்த விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி, முருகன், ஆஞ்சநேயர், வீரபுத்திரன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், நந்தி, 64 நாயன்மார்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பராமரிப்பின்றி அங்கிருந்தது தெரியவந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் வந்ததையடுத்து, பக்தர்கள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் கூறுகையில், ‘‘உயர்அதிகாரிகள் உத்தரவுபடி, காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து, எங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். பாதியில் நின்று போன திருப்பணிகள், அறநிலையத்துறை சார்பாக நடைபெறும். கோவில் திருப்பணிக்கு உபயதாரர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்,’’ என்றார்.
|