வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2025 11:09
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நடராஜ பெருமானுக்கு ஆவணி சதுர்த்தி திருமஞ்சனம் நடந்தது. ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் ஒன்று தான் ஆவணி சதுர்த்தி திருமஞ்சனம். திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் சபையில் நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நடராஜர் அபிஷேகத்தை காண்பது பிறவிப்பயன் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.