அனுப்பர்பாளையம்; திருப்பூர், செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலை மகாராஜா, முண்ட சுவாமி, ஸ்ரீ ராஜ காளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பிரம்மசக்தி, ஆகிய சுவாமிகளின் 19 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 7 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று 8 ம் தேதி மாலை பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வருதல், இரவு திருகம்பம் நடுதல் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை 9 ம் தேதி காலை 7:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருதல், மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை, கணியான் அழைப்பு, இரவு 8:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல் மற்றும் அம்மன் அழைத்தல். இரவு 9:00 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, இரவு 11:00 மணிக்கு மாசான சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லுதல், சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10 ம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பொங்கல் வைத்தல், மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை தொடர்ந்து வில்லுப்பாட்டு, இரவு 10:00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11 ம் தேதி மதியம் 11:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.