மதுரையில் 5 ஆயிரம் அடி உயரத்தில் அருளும் பெருமாள்; அற்புதங்கள் நிறைந்த ‛வாசிமலை’
பதிவு செய்த நாள்
22
செப் 2025 05:09
மதுரை மாவட்டத்தில் சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமி, அழகர்கோவில் கள்ளழகர், அழகர்கோவில் ராமத்தேவர் சித்தர் மலை, அழகர்கோவில் நுாபுர கங்தை தீர்த்தம், அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி குடைவரை கோயில், ஒத்தக்கடை யானை மலை, செல்லம்பட்டி அருகே திடியன் மலை உள்ளிட்ட மலைகள் பிரசித்தி பெற்றவை. மதுரை மாவட்டத்தில் உள்ள மலைகளிலேய மிகவும் உயரமான மலை அதாவது கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலை வாசிமலை. இந்த மலை எழுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. செங்குத்தான கரடு முரடான மலைகளை கடந்து உச்சி மலைக்கு சென்றால் அங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாார். ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமே கோயிலுக்கு செல்ல முடியும். மற்ற நாட்களில் கோயில் திறந்து இருக்கும். பூஜைகள் நடைபெறாது. யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலை வாசிமலை. எனவே தகுந்த பாதுகாப்புடன் வாசிமலைக்கு செல்ல வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைக்கு ஒரு நாள் முன்பே அடியார்கள் மலைக்கு சென்று பூஜை ஏற்பாடுகளை செய்கின்றனர். அங்குள்ள மழை நீரை தொட்டி கட்டி சேமித்து வைத்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மலை ஏற்றத்தில் ஈடுபடுவோர் மற்றும் இளைஞர்கள் குடும்பம் சகிதமாக வாசமலைக்கு ஆர்வமாக வருகின்றனர். இந்தாண்டு புரட்டாசி சனிக்கிழமையில் வாசிமலை பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடைபெற்றன. பெருமார் கோயில் அருகில் பிள்ளையார், அனுமன் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். சுவாமிக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. இதற்காக அவர் ஒரு நாள் முன்னதாக கோயிலுக்கு சென்று அன்னதானம் மற்றும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தீபத்துாணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை மேற்கொண்டார். கேட்ட வரம் தரும் பெருமாள் சுவாமிக்கு முடிக் காணிக்கை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கும் வாசிமலையான் பெயர் வைத்து வணங்கி வருகின்றனர். எழுமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் வாசிமலை உச்சியில் பெருமாள் அருள்பாலிக்கிறார். செல்லும் வழியில் கத்திப்பாறை, யானைப் பாறை, நந்திப்பாறை உள்ளிட்ட இயற்கையின் அற்புதங்களை தரிசனம் செய்தபடி மலை ஏறலாம். பெருமாள் சுவாமி அருள் பெறலாம்.
|