கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற அரங்கநாதசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாக துவங்கியது. நேற்று செவ்வாய் இரவு ராக்கால பூஜை முடிந்து ரங்கநாயகி தாயார் சன்னதியில் விஷ்வக் சேனர் ஆவாகனம், புண்யா வசனம், கலச ஆவாகனம் வேத கோஷங்கள் முழங்க மூலவர் மற்றும் உற்சவர் ரங்கநாயகி தாயாருக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு பட்டுடுத்தி, உற்சவர் தாயார் வெள்ளி சப்புரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள வாத்தியம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து வேதபாராயினும் உபநிஷத் லட்சுமி அஷ்டோத்திரம் சற்றுமுறை சேவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினமும் ரங்கநாயகி தாயார் திருக்கோவிலில் உட்பிரகாரத்தில் வளம் வந்து மீண்டும் அஸ்தானம் அடைவார்.