நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆண்டுதோறும் நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு சார்பில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 64-வது ஆண்டு நவராத்திரி துர்கா பூஜை விழா, மகா சாஸ்தி பூஜையுடன் நேற்று துவங்கியது. விழாவை தொழிற்சாலை பொது மேலாளர் விகாஷ் பூர்வார், தீப்ஷிகா குழு தலைவி டாக்டர் ஸ்வேதா பூர்வார் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில் துர்கை, சிவன் உட்பட பக்தி பாடலுக்கு அருவங்காடு நாட்டிய பள்ளி மாணவியர் நடனமாடினர். தொடர்ந்து நாளை முதல் தினமும் மகா சப்தமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி, அன்னதானம், சந்தியா ஆரத்தி, இன்னிசை நிகழ்ச்சி, பஜனை உட்பட கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிரபஞ்சம் அனைத்தும் அம்மனின் காலடியில் அடக்கம் என்பதை குறிக்கும் வகையில், அம்மனின் கால் பாதத்தை கண்ணாடியில் பார்த்து பக்தர்கள் வழிபடுதல், சுமங்கலி பூஜை, அம்மனுக்கு செந்தூரம் திலகமிடும் குங்கும் வழிபாடு உட்பட பல்வேறு பூஜைகள் நடக்கிறது, தொடர்ந்து 2ம் தேதி சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு செயலாளர் சதான் கோஷ், ஒருங்கிணைப்பாளர் ஜித்தேந்திரா சின்கா, இணை செயலாளர் சங்கர் தாஸ், பொருளாளர் சாந்தனு மன்தல் உட்பட நிர்வாகிகள் மற்றும் பெங்காளி இன மக்கள் செய்து வருகின்றனர்.