மதுராந்தகம்; செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும் கோதண்டராமர் திருக்கோவிலில், 48 நாள் மண்டல அபிஷேகம் நிகழ்வு, விமரிசையாக நடந்தது.
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் உலகில் வேறெங்கும் காண முடியாத நிலையில், மூலவர் சன்னிதியில் ராமர் சீதையை கைப்பற்றியவாறு, திருமணக் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு. உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, திருக்கோவிலில் சன்னிதிகள், விமானங்கள், கொடி மரம், ராஜகோபுரம் ஆகியவை புனரமைக்கப்பட்டு, ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நிறைவுற்று நேற்றுடன் 48 நாட்கள் நிறைவடைந்தன. இதையடுத்து, மண்டலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.