பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமியம்மன் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள லட்சுமி நாராயண பெருமாள், லட்சுமியம்மன் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. தடப்பெரும்பாக்கம் குளக்கரை விநாயகர் கோவிலில் இருந்து, பெண் பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். அப்போது, லட்சுமியம்மன் சமேத லட்சுமிநாரயண பெருமாள் திருமண கோலத்தில், மணமேடையில் வீற்றிருந்தனர். பட்டாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமிகளுக்கு மாலை மாற்றுதல், மாங்கல்யம் அணிவித்தல் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, மஹா தீபாரதனை நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என, கோஷம் எழுப்பி பெருமாளையும், லட்சுமியம்மனையும் வழிபட்டனர்.