எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆடு பலியிட்டு ஆண்கள் மட்டும் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2025 06:10
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வழிபாடு நடந்தது.
முதல்நாடு கண்மாய் கரையில் எல்லைபிடாரி அம்மன் பீடம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நடக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் 5 ஆண்களுடன் பிறந்த பெண் ஒருவர் அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தது மாயமானார். இக்கிராம மக்களின் கனவில் தோன்றியவர் ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக காப்பாற்றுவேன். ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு நாள் ஆடுகளை பலியிட்டு வழிபாடு செய்ய வேண்டும். பெண்கள் வரக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்தாண்டு புரட்டாசி மாதத்தில் வழிபாடு தேதி அறிவித்ததில் இருந்து பீடம் அமைந்த பகுதிக்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருவிழாக்காக அனைத்து வீடுகளிலும் அரிசி,பணம் வசூலித்து பூஜை நடத்தப்பட்டது. நேற்று இரவு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டை செய்து 100 ஆடுகளை பலியிட்டு படையல் இடப்பட்டது. பின் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. பனை ஓலையால் செய்த மட்டையில் உணவு பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு,விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இவ்விழாவில் கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.