பதிவு செய்த நாள்
20
அக்
2025
05:10
தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். தீயவை நீங்கி, வாழ்வில் ஒளி பரவும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, உடுமலை பகுதிகளிலுள்ள கோவில்களிலும், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், பழச்சாறு, இளநீர், திருநீர், சந்தனம் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன.
உடுமலை திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் தங்க கவச அலங்காரத்தில் எம்பெருமாள் அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர் கோவிலில், சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களில் அபி ேஷகம், அலங்கார பூஜை நடந்தது, திருநீறு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார். நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், ஆனந்த சாயி திருக்கோயில் என அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருமூர்த்திமலை திருமூர்த்தி மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தீபாவளி மற்றும் அமாவாசை தினம் என்பதால், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருமூர்த்தி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படவில்லை.
பொள்ளாச்சி தீபாவளி பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனர்.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி குபரே சிறப்பு பூஜை நடந்தது. ஒன்பது வகை அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஒன்பது வகையான பூக்களை கொண்டு அலங்கார பூஜை நடந்தது. அதன்பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வால்பாறை வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காலபூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, முருகன் சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருமலை பாலாஜிகோவில், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், காமாட்சிஅம்மன் கோவில், சிறுவர் பூங்கா பராசக்தியம்மன் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.