தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, சதய விழா என்ற பெயரில், இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் அக்.,31ம் மற்றும் நவ.1ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதையொட்டி, பெரிய கோவிலில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் செல்வம்,அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கவிதா ஆகியோர் முன்னிலையில், பந்தல்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. முதலில், பந்தல்காலுக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரணை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். சதய விழாவை முன்னிட்டு, வரும் அக்., 31 ம் தேதி பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். தொடர்ந்து நவ., 1ம் தேதி காலை தேவார நுாலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறும். பிறகு, பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். ராஜராஜ சோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைக்கு சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும். இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெறும்.