திருப்பரங்குன்றம் மலை மேல் மகா தீபம் ஏற்ற திருவண்ணாமலையில் தயாராகும் கொப்பரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2025 11:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உபயமாக வழங்க கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் புதிய தாமிரக் கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர தீப கொப்பரை வைத்து அதில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். அந்த தீப தாமிர கொப்பரை 1993 முதல் கடந்த ஆண்டுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மலை மேல் மகா தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் புதிய தாமிர தீப கொப்பரை திருவண்ணாமலையில் தயாரிக்கப்படுகிறது. திருவண்ணாமலை தீப கொப்பரை தயாரித்த வல்லுனர்கள் குன்றத்து தீப தாமிர கொப்பரையை தயாரித்து வருகின்றனர்.