உத்திரமேரூர்; திருப்புலிவனம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் வளாகத்தில், அய்யப்பன் கோவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்தாண்டு துவக்கினர். தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு, அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 6:00 மணிக்கு, விநாயகர் பூஜை, கோபூஜை, தனபூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு மூல மந்திர ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கோவில் பரிகார தெய்வங்கள் வழிபாடு நடந்தது. காலை 9:25 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை, கோவிலுக்குள் எடுத்துச் சென்று, மூலவரான அய்யப்பன் சுவாமி சிலைமீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று, அய்யப்பன் சுவாமி அருள் பெற்று சென்றனர்.