பதிவு செய்த நாள்
19
நவ
2025
01:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உட்பட 8 கோயில்களில் பக்தர்களின் தரிசனத்தை இடைநிறுத்தி ரூ.500 கட்டணத்தில் ஒருமணி நேர ‘பிரேக்கிங்’ தரிசனத்தை அறிமுகப்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அறநிலையத்துறைக்குட்பட்ட முக்கிய கோயில்களில் இலவச தரிசனம் இருந்தாலும் கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன், சுவாமியை தரிசிக்க ரூ.100 செலுத்தி நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த தரிசன கட்டணம் வசூலிப்பதற்கே எதிர்ப்பு உள்ள நிலையில், ஒரு மணி நேரம் ‘பிரேக்கிங்’ தரிசனம் முறையை அறநிலையத்துறை அறிமுகப்படுத்த உள்ளது. மதுரை, பழநி, சமயபுரம், ஸ்ரீரங்கம் உட்பட 8 முக்கிய கோயில்களில் அறிமுகப்படுத்த பக்தர்களிடம் அறநிலையத்துறை கருத்து கேட்டுள்ளது. இதற்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்து ஆன்லைனில் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளிப்படை தன்மை இல்லை ஆலயம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறியதாவது: கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை அறநிலையத்துறை மறந்து வணிகரீதியாக செயல்பட்டு வருகிறது. ‘பிரேக்கிங்’ தரிசனம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. அறநிலையத்துறை சட்டப்பிரிவு 22ன் கீழ் மக்கள் கண்ணில் படும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை ‘பிரேக்கிங்’ தரிசனத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் ரூ.100 கட்டணம் செலுத்தியவர்கள், இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
இலவச தரிசனமே போதும் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது: அறநிலையத்துறையின் இந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது. இந்த தரிசன நேரத்தில் பொது தரிசனம் மற்றும் ரூ.100 டிக்கெட் தரிசனம் முழுவதும் நிறுத்தப்படுவது அடிப்படை வழிபாட்டு உரிமையை தடுக்கக்கூடிய செயல். ஏற்கனவே பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மேலும் சில மணி நேரம் அதிகமாக நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமை திட்டமிட்டு முடக்கப்படுகிறது. கட்டண தரிசனமே கூடாது என்பதே எங்கள் இயக்கத்தின் கோரிக்கை. அனைவருக்கும் இலவச தரிசனம் என்பதே உண்மையான சம உரிமை, சமூக நீதி என்றார்.
நடைமுறையில் சாத்தியமா ‘பிரேக்கிங்’ தரிசனம் முறை என்பது கோயில்களில் திருவிழா இல்லாத சமயத்தில் அமல்படுத்தப்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு முன் ‘இந்த தேதியில் தரிசனம் செய்ய வருகிறோம்’ என கோயிலின் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி ‘புக்கிங்’ செய்ய வேண்டும். பின்னர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று வரிசையில் காத்திருக்காமல் உடனே தரிசிக்க முடியும். இதற்கான வசதி முக்கிய கோயில்களில் இருந்தாலும் பக்தர்களின் எதிர்ப்பால் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பான வழக்கில், ‛அறநிலையத்துறை அமல்படுத்திய பிறகு அதில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம்’ என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்தது. இதன்காரணமாகவே ‘பிரேக்கிங்’ தரிசனத்தை அறிமுகப்படுத்த அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது.@@block_B@@
பூலோகநாதர் கோவிலில் ‘கடம்ப பூ’ ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசயம்
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு தனி சன்னதி உள்ளது.
இந்த கோவிலின் தல விருட்சம் வன்னி மரம். இந்த கோவிலில், முருகனுக்கும்,பெருமாளுக்கும் கடம்ப பூவால் அர்ச்சனை செய்வது சிறப்பாகும். இந்த கோவிலில் கடம்ப மரம் வளர்த்து வருகின்றனர். இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டுமே பூக்கள் பூக்கும். இந்த பூவின் நறுமணத்தை முகர்ந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் நேற்று கடம்ப மரத்தில் பூக்கள் பூத்து ரம்மியமாக காட்சியளித்தன. வித்தியாசமான அழகுடன் காணப்படும் இந்த பூவை காண பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி; ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியம் வந்தார் பிரதமர் மோடி
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பகவான் பாபாவிற்கு புகழஞ்சலி செலுத்துகிறார். இதற்காக புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இதற்காக புட்டபர்த்தி வந்த பிரதமருக்கு சிற்பபான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். புட்டபர்த்தி நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக, பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக பிரதமர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது; புட்டபர்த்தியில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுடன் கலந்து கொள்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். சமூக சேவை மற்றும் சமூகத்தின் ஆன்மீக விழிப்புணர்வுக்கான அவரது வாழ்க்கை மற்றும் முயற்சிகள் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பு கொள்ளவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எனக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. என குறிபிட்டுள்ள பிரதமர் பாபாவுடன் தனது பல்வேறு படங்களை பதிவிட்டுள்ளார்.