உத்திரமேரூர்; கருவேப்பம்பூண்டியில், விஸ்வநாதர் கோவிலில், 1.14 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவில் 1,000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, மாசிமகம், சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த கோவில் முறையாக பராமரிப்பு இல்லாததால், மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, உப சன்னிதிகள், மகா மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து இருந்தது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 -–- 25ம் நிதி ஆண்டில், கோவில் பொதுநிதியின் கீழ், 1.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள், எட்டு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. கோவிலை பழமை மாறாமல் மூலவர் சன்னிதி, மகா சன்னிதி, அம்பாள் சன்னிதி ஆகியவை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவில் 1.14 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மூன்று மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.