பதிவு செய்த நாள்
23
நவ
2025
03:11
– நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் நிலைத்திருக்கும்,’’ என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், வசுந்தரா என்க்ளேவில் அமைந்துள்ள சங்கட மோர்ச்சன் கணபதி கோவில், மயூர் விஹார் – காருண்யா கணபதி கோவில், சுப சித்தி விநாயகர் கோவில் ஆகியவற்றுக்கு விஜயம் செய்தார்.
அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த பக்தர்களுக்கு, அவர் வழங்கிய அருளுரை:
சத்தியம் எப்போதும் ஒன்றே தான்; அது எந்த வடிவிலும், எந்த நிலையிலும் மாற்றமில்லாமல் நித்தியமான ஒன்றாகவே இருக்கும்.
ஆதி சங்கரரின் உபதேசங்கள், தர்மத்தை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொருவரையும் அந்த ஒரே சத்தியத்தின் இலக்கை நோக்கி அழைத்துச் செல்கின்றன. தர்ம மார்க்கமே சத்தியத்துக்கும் உண்மைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். அந்த பாதையானது சத்தியம் ஒன்று தான்.
மனிதப் பிறவி, அளவிட முடியாத மதிப்பும் அருமையும் உடையது; அதை தேவையற்ற காரியங்கள் வாயிலாக வீணாக்க கூடாது. ஆதி சங்கராச்சாரியாரின் உபதேசங்களுக்கு மேன்மையான அர்த்தம் உண்டு.
அவை மனிதப் பிறவியின் உண்மையான குறிக்கோளை அடையும் மார்க்கத்தைக் கற்பிக்கின்றன. அவற்றை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அருளுரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ‘பேடிஎம்’ நிறுவனத்தின் ஊழியர்களிடையே அவர் உரையாற்றினார். புதுடில்லி விஜயம் மேற்கொண்டுள்ள சுவாமிகளை, பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் தரிசனம் செய்து ஆசி பெற்றனர்.