6 கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி சங்கு ஊதி மனு கொடுத்த அகில பாரத இந்து மகா சபா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2025 01:11
மயிலாடுதுறை; தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை மண்டல இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட 6 கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் இணை ஆணையர் அலுவலகத்தில் சங்கு ஊதி மனு கொடுத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் சுயம்பிரகாசர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சூரியனார்கோயில், சுக்கிரன் கோயில், கும்பகோணம் ஏரகரம் கந்தநாதசாமி கோயில் மற்றும் மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள மாங்குடி சிவலோகநாதர் சுவாமி கோயில் ஆகிய ஆறு கோயில்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக திருப்பலி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் கடந்த மார்ச் மாதம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் ராம நிரஞ்சன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் 50 க்கு மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சங்கு ஊதியவாறு முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக பேரணியாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய பின்னர் கோரிக்கை மனுவை அறநிலையத்துறை அலுவலரிடம் வழங்கினர். அவர்களிடம் இந்த ஆறு கோயில்களிலும் விரைவில் திருப்பணி தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள் விளக்கம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.