திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றிய தகவல் தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட நுாலில் ஆதாரம்; ‘உருட்டு’களுக்கு முற்றுப்புள்ளி
பதிவு செய்த நாள்
09
டிச 2025 10:12
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், உத்தரகாரணாஹமம், திருப்பரங்குன்றம் கோவில், வேற்கோட்டம் உள்ளிட்ட நுால்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் தொல்லியல் துறை, 1981ல் வெளியிட்ட, ‘குன்றத்து கோயில்’ நுாலிலும் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தீபத்துாண் அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவை கல் என்று திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை அன்று தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டும், அறநிலையத்துறை முன்வரவில்லை. விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை, மறுநாள் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. அதையும் அரசு அனுமதிக்காத நிலையில், ‘திருக்கார்த்திகை மறுநாள் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது’ என சிலர் வசைபாடினர். ஆனால், ‘கார்த்திகை மாதம் முழுதும் தீபம் ஏற்றலாம். திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் பொதுமக்கள் தீபம் ஏற்றலாம் என நுால்களில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என, மதுரை வழக்கறிஞரும், ஆகம நிபுணருமான சங்கரன் கூறுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: தீபம் எங்கு ஏற்றுவது, எந்த காலத்தில், நட்சத்திரத்தில், நேரத்தில் ஏற்றுவது, யார் ஏற்றுவது, எதில் ஏற்றுவது போன்ற எண்ணங்கள் இன்றைய ஆன்மிக அரசியலில் எழுவது இயல்பானவை. கோவிலின் உரிமை, கோவில் சொத்து சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களில் வரிசைகட்டி நிலுவையில் உள்ள நிலையில், முருகனின் முதல் படையான திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கும் இருந்தது. அதில் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்ற சர்ச்சையில் லண்டன் பிரிவியூ கவுன்சில் முதல், உயர் நீதிமன்றம் வரை தீர்ப்புகளை வழங்கி உள்ளன. தற்காலத்தின் தீர்ப்புகளும் அதில் அடங்கும். நீதிமன்றங்களில் வெற்றி பெற்று விடுகிறோம். ஆனால், அதை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களிடம் தோற்று போகிறோம் என்பது உண்மை. யார் தீபம் ஏற்ற வேண்டும் உத்தர காமிகம், உத்தரகாரணாஹமம் என்ற ஆகம நுால்களில் கோவில், வீடு, ஊர் கிராம மையப்பகுதியில், கோபுர, விமான உச்சியில், அரசர் அரண்மனை, மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் ஊரின் மையமாகிய மலை உச்சியில் தீபத்துாணை அமைத்து, அதில் இரண்டாம் உலகப் போருக்கு முன் வரை தீபம் ஏற்றியுள்ளனர். அதை அறியாதவர்கள் சிலர், ‘எல்லைக்கல்’ என்று வாதிடுகின்றனர். தீபத்துாண் உயரம், அகலம், வடிவம், தீபம் ஏற்றும் மேல் பகுதி எப்படி இருக்க வேண்டும் என்று இந்நுாலில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணும் அதன் அடிப்படையிலேயே உள்ளது. எப்போது தீபம் ஏற்ற வேண்டும் அன்றைய தினம் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் பின்பும் எவ்வளவு நாழிகை கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும் என்றும், அந்த மாலை வேளையில் கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமி கூடிய அல்லது பவுர்ணமி இல்லாமல் கார்த்திகை நட்சத்திரம் உள்ள நாளில் ஏற்ற வேண்டும். மற்ற நாட்களில் தீபம் ஏற்றக்கூடாதா என்று கேள்வி எழும். கார்த்திகை முதல் நாளில் இருந்து, மாதம் முடியும் வரை ஏற்றினால் சிறப்பாகும். நம் வீடுகளில் இன்றும் தினமும் மாலை பூஜை அறை, வாசலின் இருபுறம், நடுக்கூடத்தில் வீட்டு முற்றத்தில் தீபம் ஏற்றலாம் அல்லது பவுர்ணமி இல்லாமல் கார்த்திகை நட்சத்திரம் உள்ள நாளில் ஏற்ற வேண்டும். கோவிலில் தீபம் ஏற்றுவதை உத்தம, மத்திய, அதமம் என்று மூன்று வகையாக பிரித்து, அதில் சிறந்தது முதல் நாள் பரணி தீபம், அடுத்த நாள் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் டிச., 2ம் தேதி பரணி தீபமும், 3ம் தேதி பெரிய கார்த்திகை தீபத்திருநாளும், 4ம் தேதி கார்த்திகை, ரோகிணியோடு கூடிய பவுர்ணமியன்று சர்வ தீப நாளாகவும் ஆகமம் கூறுகிறது. தீபத்தை பக்தர்கள் யார் வேண்டுமானாலும் ஏற்றலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த ராம ரவிகுமாரை, தீபத்துாணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. ஆகம விதிமீறலும் இல்லை. அப்படி தீபம் ஏற்றியவரை, ஊரார் முன்பு கோவில் சார்பில் கவுரவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலங்காலமாக தொன்று தொட்டு தொடர்கின்ற ஒரு சமூக கலாசார அடையாளமாக பார்க்கப்பட்டதை அழியாமல் பாதுகாப்பது நம் கடமை. இன்றும் குன்றத்துார் உள்ளிட்ட சில கோவில்களில் தீபத்துாணில் பாரம்பரிய முறையில் தீபம் ஏற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நாயக்கர் காலத்து தீபத்துாண்தமிழக தொல்லியல் துறை ஒப்புதல்: ‘குன்றத்து கோயில்’ நுாலை, 1981ல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்டது. அதில், 129ம் பக்கத்தில், தீபத்துாண் என்ற தலைப்பில் ‘மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு சென்றால் தீபத்துாண் இருப்பதை காணலாம். இத்துாண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்து கல்வெட்டும் துாணிலேயே எழுதப்பட்டுள்ளது. இந்த தீபத்துாணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம். இத்துாணில் கார்த்திகை தோறும் ஊர் மக்கள் விளக்கேற்றி வந்தனர்’ என, நுாலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க., – எம்.பி., கனிமொழி உட்பட பலரும் செவி வழி செய்திகளை கேட்டு, தீபத்துாணை ‘நில அளவைக்கல்’ என்று கூறி வருவது முற்றிலும் தவறு என்பதை தொல்லியல் துறை நுால் உறுதி செய்கிறது.
|