உத்தரகோசமங்கையில் ஜன., 2ல் சந்தனம் படி களைதல்: மரகத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 10:12
உத்தரகோசமங்கை; ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரையில் வரக்கூடிய ஆருத்ரா தரிசன விழாவில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதனை முன்னிட்டு அபூர்வ பச்சை மரகதத்தாலான மரகத நடராஜரின் திருமேனியில் வருடத்திற்கு ஒருமுறை சந்தனம் படி களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிவஸ்தலமான உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்ததாகும். இதனை முன்னிட்டு வருகிற டிச., 25 அன்று மங்கள விநாயகர் கோயிலில் அனுக்கை மற்றும் காப்பு கட்டுகளுடன் விழா தொடங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக உத்தரகோசமங்கை வருகின்றனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் வடக்கு பகுதியில் தனி சன்னதி கோயிலாக மரகத நடராஜர் வீற்றிருக்கிறார். ஒலி, ஒளியால் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வருடம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட புனித சந்தனத்தால் சந்தனம் காப்பிடப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாளான வருகிற ஜன., 2 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனம் படிக்களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்பட்டு அபூர்வ பச்சை மரகத நடராஜப் பெருமான் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அன்று முழுவதும் தொடர்ந்து 32 வகையான அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடக்கிறது. இரவு 1:00 முதல் 2:00 மணிக்கு மீண்டும் அபிஷேகம் தீபாராதனைகளுக்கு பின்னர் திரையிப்படுகிறது. அச்சமயத்தில் புதியதாக மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனம் காப்பிடப்படும். அதிகாலை 4:30 மணிக்கு அருணோதய காலத்தில் மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதனருகே உள்ள கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடக்கிறது. புதிய சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மறுநாள் ஜன., 3 சனிக்கிழமை அன்று காலை கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாச ஸ்வாமிகளுக்கு காட்சி கொடுத்து நிறைவடைகிறது. பல்வேறு பகுதியில் இருந்து வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.