பரமக்குடி; பரமக்குடி தரைப்பாலம் அருகில் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கேரளாவுக்கு அடுத்தபடியாக திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.
இங்கு வடக்கு திசை நோக்கி ஐயப்ப சுவாமி மூலவராக வீற்றிருக்கிறார். மேலும் சபரிமலையில் உள்ள அனைத்து சன்னதிகளும் இங்கு உள்ளன. தொடர்ந்து கேரளா மாநிலம் ஆரியங்காவில் அருள்பாலிக்கும் புஷ்கலா தேவி இங்கு தனி சன்னதியில் உள்ளார். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இந்த ஆண்டு டிச., 25 இரவு 7:00 மணிக்கு தர்ம சாஸ்தா புஷ்கலாதேவி நிச்சயதார்த்த வைபவம் நடந்தது. இன்று காலை மாப்பிள்ளை அழைப்பு, திருமாங்கல்யம் மேளதாளத்துடன் நகர்வலம் வந்தனர். பின்னர் பின் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்கு பிறகு 10:25 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சரண கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நலுங்கு சுற்றுதல், விவாக சடங்குகள் சவுராஷ்டிர முறைப்படி நடத்தப்பட்டது. முக்கியமாக கேரளா ஆரியங்காவில் அருள் பாலிக்கும் புஷ்கலா தேவி சவுராஷ்டிர குல கன்னியாக விளங்குகிறார். அதேபோல் பரமக்குடியிலும் அனைத்து வகையான விவாக சடங்குகளும் நிகழ்த்தப்படுகிறது. இரவு திருக்கல்யாண கோலத்தில் யானை வாகனத்தில் வலம் வந்தனர். நாளை காலை மண்டல பூஜை விழாவையொட்டி, அபிஷேக ஆராதனைகள், இரவு ஐயன் வீதி வலம் நடக்கிறது.