கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 2022 முதல் தேவஸ்தானம் சார்பில் நாதஸ்வரம், தவில் சங்கீத உற்சவம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, நான்காவது நாதஸ்வரம், தவில் சங்கீத உற்சவம் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. முதலில் நாதஸ்வர, தவில் கலைஞர்களின் மங்கள வாத்திய சமர்ப்பணம் நடந்தது. மூலவரின் சன்னதி முன் நடந்த இந்த நாதார்ச்சனையில் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு நடந்த நாதஸ்வர பஞ்சரத்ன கீர்த்தனை இசை ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்தது. மதியம், 12:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் சங்கீத உற்சவத்தை கேரளா சங்கீத நாடக அகாதமி தலைவர் மட்டன்னூர் சங்கரன்குட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குருவாயூரப்பன் நாதபிரம்மம் விருது பிரபல நாதஸ்வர கலைஞர் வெட்டிக்கவல சசிகுமாருக்கும் வில்லுப்பாட்டு கலைஞர் ஓச்சிறா பாஸ்கரனுக்கும் வழங்கப்பட்டது. தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். கேரள கலாமண்டலம் முன்னாள் துணைப் பதிவாளர் கலாதரன், கோவில் நிர்வாக குழு உறுப்பினர் விஸ்வநாதன், நாதஸ்வரக் கலைஞர்களான குருவாயூர் முரளி, ஆறன்முள ஸ்ரீகுமார், சவரா கண்ணன், அஜித் பேரகம், துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.