திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி
பதிவு செய்த நாள்
07
ஜன 2026 10:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுள பஞ்சமி தினத்தில் முக்தியடைந்தார். முக்தியடைந்த இடத்தில், ஆண்டுதோறும், பகுள பஞ்சமி தினத்தில், ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா, கடந்த ஜன.3ம் தேதி துவங்கியது. நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிழ்வான ஆராதனையை முன்னிட்டு, இன்று(7ம் தேதி) அதிகாலை, தியாகராஜ சுவாமி வாழ்ந்த திருமானஞ்சன வீதியில் உள்ள வீட்டில், இருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டாகி, மேள தாளங்கள் முழங்க, வீதியுலவாக, சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலுார் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், உள்ளிட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விழா இரவு 11:20 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
|