மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 04:01
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் நடந்தது. இரவு 10:40 மணிக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். இரவு 12:20 மணிக்கு மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, எஸ்.பி., சாய்பிரனீத், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, புதுச்சேரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.