சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்; நாளை யாகசாலை பூஜை
பதிவு செய்த நாள்
19
பிப் 2026 12:02
சின்னமனூர்; சின்னமனூரில் உள்ள பழமையும், பிரசித்தி பெற்றதுமான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பின் பிப் . 22 ல் நடைபெறுவதை ஒட்டி நாளை ( பிப் . 20 ) காலை யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பழமையும், சிறப்பும் பெற்ற பெருமாள் கோயில்களில் முதலிடம் பெறுவது சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். பெருமாள் திருப்பதியில் கையை கீழ் நோக்கியும், காஞ்சியில் ஆசி வழங்குவது போன்றும் இருப்பார்கள். ஆனால் இங்கு கன்னிகாதானம் பண்ணுவது போன்ற தானகஸ்த கோலத்தில் நின்றுள்ளார். சுமார் 9 அடி உயரமுள்ள நின்ற கோலத்தில் இப்பகுதியில் வேறு எங்கும் இது போன்ற தோற்றத்தில் பெருமாள் இல்லை. பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பம்சமாகும். நீண்ட காலத்திற்கு முன் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி கட்டி, அவரை பிரதிஷ்டை செய்ய உத்தேசித்திருந்த நாளில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கோயிற்கு வந்து, இங்குள்ள பாக்கு மரத்தில் ஏறி ஆவேசத்துடன் கூச்சலிட்டார். அவரை சமாதானம் செய்து கேட்டபோது, நான் பெருமாளின் காலடியில் இருக்க ஆசைப்படுகிறேன், என்னை இடமாற்றம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார். எனவே ஆஞ்சநேயரை இடமாற்றம் செய்யாமல், பெருமாள் காலடியிலேயே வைக்கப்பட்டார். நோய்வாய்பட்டவர்கள் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் துண்டை கட்டி, அபிஷேகம் முடிந்தபின் அந்த ஈரத் துண்டை நோய்வாய் பட்ட வரின் உடம்பில் போர்த்தினால் நோய் குணமாகும். திருமண தடையும் நீங்கும் என்று அர்ச்சகர்கள் கூறுகின்றனர். இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 2005 ல் நடைபெற்றது. அதற்கு பின் நடைபெறவில்லை. ஒவ்வொரு 12 ஆண்டிற்கும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகளாகி விட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று செயல் அலுவலர் நதியா ஆலோசனையின் பேரில் அறங்காவலர் குழு தலைவர் குமரேசன் முயற்சியில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விரியன் சாமி, தவமணி ராமச்சந்திரன், பால்ச்சாமி, நாகஜோதி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் இணைந்து திருப்பணி செய்தனர். வரும் பிப் . 22 ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை பகவத் அனுக்ஞை, விஸ்வக்ஸேன பூஜை, புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம் வாஸ்து ஹோமம், சாற்று மறையுடன் துவங்கியது. நாளை காலை 8.30 மணிக்கு மேல் முதல் முதல் கால யாகசாலை பூஜை ஹோமங்கள் துவங்குகிறது. தொடர்ந்து பிப் 21 மற்றும் 22 காலை வரை 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. பிப் . 22 காலை 10.35 க்கு மேல் 11.35 க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை ஒட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழை மரங்களும், மா விலை தோரணங்களும் கட்டப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள வீதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
|