மேட்டுப்பாளையம்: மூலிகை ஓவியங்கள் கொண்ட, பழமையான சுந்தர விநாயகர் கோவில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் சந்து வீதியில், பழமையான சுந்தர விநாயகர் கோவில், காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அதிகாரியின் கட்டுப்பாட்டில், இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ளது. கட்டடங்கள் மிகவும் பழமை வாய்ந்து இடியும் தருவாயில் உள்ளது. கோவிலில் மூலிகைகளால் வரையப்பட்ட முருகன், விநாயகர், மகாலட்சுமி, கருடன், சிவன் உட்பட 10க்கும் மேற்பட்ட கடவுள்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்து அறநிலையத்துறை சார்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தை வேலாயுதசுவாமி செயல் அலுவலர் வனிதா கூறுகையில், ‘‘ரூ.47 லட்சம் மதிப்பில், கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கி நடத்து வருகிறது,’’ என்றார். இப்பகுதியின் 5வது வார்டு கவுன்சிலர் விஜய காண்டீபன் கூறுகையில், ‘‘கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் மனு அளித்தேன். அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழமையான கோவிலில், மூலிகை ஓவியங்கள் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது. இவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.