சங்கராபுரம்: பாவளம் காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழாநடந்தது. சங்கராபுரம் அடுத்த பாவளம் காளியம்மன் கோவிலில் மாசி மாத மயான கொள்ளை திருவிழாவையொட்டி நேற்று காலை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி மயானத்திற்கு புறப்பாடானது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடனுக்காவும் அம்மன் வேடமணிந்து, பக்தி பரவசத்துடன் பம்பை உடுக்கை அடித்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். மயான கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.