காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில், ‘டைல்ஸ்’ பதித்த சர்வதீர்த்த குளத்தின், நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகளை ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்தினர் நேற்று வேருடன் அகற்றினர்.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகில் உள்ள சர்வதீர்த்த குளம் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டும், நடைபாதையில் செடிகள் வளர்ந்து குளக்கரை சீரழிந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், 34 லட்சம் ரூபாய் செலவில் குளக்கரை நடைபாதைக்கு, ‘டைல்ஸ்’ பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால்,, சர்வதீர்த்த குளம் புதுப்பொலிவு பெற்றது. இப்பணி நடந்து முடிந்து இரு மாதங்களே ஆன நிலையில், ‘டைல்ஸ்’ பதிக்கப்பட்டுள்ள நடைபாதையில் செடிகள் வளர்ந்து இருந்தது. இச்செடிகளின் வேர்களால் நாளடைவில் ‘டைல்ஸ்’களில் உடைப்பு ஏற்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்வோர், நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், சர்வதீர்த்த குளக்கரையில் ‘டைல்ஸ்’ பதித்த நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகள் நேற்று வேருடன் அகற்றப்பட்டன.