பதிவு செய்த நாள்
27
பிப்
2026
04:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அறுபடை வீட்டிற்கு நிகரானது. கந்த பெருமான் சுயம்பு மூர்த்தியாகவும், மும் மூர்த்தி அம்சமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கு மாதந்தோறும் பரணி கிருத்திகை, சஷ்டி, விசாகம் நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் கந்த பெருமான் கிளி, யானை, மயில் உட்பட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.முக்கிய விழாவான ஏழாம் நாள் உற்சவமான தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது.
காலை 7:00 மணியளவில் உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, கந்தபெருமான் விசேஷ அலங்காரத்தில், கோவிலிருந்து தேரடிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் புறப்பட்டார்.பின், சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கந்தபெருமான் எழுந்தருளினார்.9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கினர்.பக்தர்கள் கந்தா, சண்முகா, முருகா என கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர்.தேரடியிலிருந்து புறப்பட்ட தேர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக பகல் 3:00 மணியளவில் தேரடிக்கு வந்தது.தேர் உற்சவத்தை ஒட்டி, மாட வீதி பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. விழா, ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தன.
விழாவில், 100 க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், உயர்கோபுரம் அமைத்து குற்ற சம்பங்கள் நடக்கமால் கண்காணித்தல், தேருடன் வலம் வருதல், மாற்று உடையில் கண்காணித்தல் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறை குழுவினரும் பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தின்போது, மாமல்லபுரத்திலிருந்து வரும் வாகனங்கள், திருப்போரூர் ரவுண்டானாவில், கிரிவல சாலையில் திருப்பி விடப்பட்டன. செனையிலிருந்து வரும் வாகனங்கள் இள்ளலூர் சந்திப்பு சாலை மற்றும் காலவாக்கம் ஆறுவழிச்சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டன. மார்ச் 2 ம்தேதி இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவமும், 5ம் தேதி காலை 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.