சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.
பிப். 27ல் முழுவீரன் தெரு கோயில் வீட்டிலிருந்து ராயன் கருப்பர் உள்ளிட்ட பரிவார தேவதைகளின் ஆயுதங்களை விழாக்குழுவினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். வேங்கைப்பட்டி ரோடு புதுவயலில் உள்ள ராயன் கருப்பன் கோயிலில் ஆயுதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவிழா துவங்கியது.
இரவு 9:00 மணிக்கு கரகம் எடுக்கும் நிகழ்வு நடந்தது, பாலாற்றில் இருந்து அம்மன் சாமியாடி கரகத்தை சுமந்தவாறு வந்தார். இரவு கோயிலில் சாமியாட்டம் நடந்தது. அரிவாளில் ஏறியும், ஆணிகள் மீது நடந்தும் அருள் வாக்கு கூறினர். சாமி வேட்டைக்குச் செல்லுதல் உள்ளிட்ட சம்பிரதாய வழிபாடு நடந்தது. பரிவார தேவதைகளுக்கு தானிய நைவேத்திய படையல் போடப்பட்டது. நேற்று காலை மண் பானையில் பொங்கல் வைத்து, கிடா பலியிடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.