பதிவு செய்த நாள்
04
மார்
2026
08:03
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இவ்விழாவில், லட்சக்கணக்கானோர் நேற்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதே நேரத்தில், மீனம்பாக்கம் கன்டோன்மென்ட் மைதானத்தில், ‘பாரதிய சம்ஸ்கிருதி சங்கம்’ சார்பில், நேற்று ஆற்றுக்கால் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. சுனந்தன் நம்பூதிரி தலைமையில் நடந்த இவ்விழாவில், சென்னை, புறநகரை சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், பின் விருஷ, கோ, நாக பூஜைகளும் நடந்தன. காலை 9:00 மணிக்கு தேவி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, சென்னை, கைரளி கலா சங்கம் சார்பில், பஞ்சாரி மேளம் கொட்டப்பட்டது. காலை 9:45 மணிக்கு, பொங்கல் அடுப்பிற்கு அக்னி அளிக்கப்பட்டு, லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் அன்பரசன், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.