பதிவு செய்த நாள்
04
மார்
2026
09:03
திருப்பூர்: அவிநாசி, தெக்கலுார், மூணுகட்டிபாளையம் அருகே உள்ள அய்யா
வைகுண்ட திருப்பதி கோவிலில், 194வது அவதார தினவிழா நேற்று நடந்தது.
அய்யா வைகுண்டரின், 194வது பிறந்த நாள் விழாவில், நேற்று முன்தினம்,
உச்சிப்படிப்பு, அன்னதர்மம், வாகன பவனி நடந்தது. சாமந்தன்கோட்டை
தொந்திவிநாயகர் கோவிலில் இருந்து, அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி
நடந்தது.
மாலையில், உகப்படிப்பு பணி விடை, ஆருத்ரா கல்வி அகாடமி
சார்பில், அன்னதர்மம் நடந்தது. ‘அய்யாவின் அருள்மொழிகள்’ என்ற
சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள்
நடந்தன.
நேற்று காலை, திருநடை திறப்பு, அய்யா வைகுண்டரின் அவதார
தினவிழா சிறப்பு பணிவிடை; தவணைப்பால் தர்மம், விளையாட்டு போட்டி, உச்சி
படிப்பு பணிவிடை, அன்னதானம், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வழங்கும் நிகழ்ச்சியில் உகப்படிப்பு பணிவிடை, திருவிழா இனிமம் வழங்கும்
நிகழ்ச்சிகள் நடந்தன.