பதிவு செய்த நாள்
05
மார்
2026
02:03
கூடலூர்; கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 40வது ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடந்தது
கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் 40வது ஆண்டு தேர் திருவிழா 27ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், 9:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி சிறப்பு யாக பூஜை, கொடிமர கும்ப பூஜை ஹோமம் பூர்ணாஹுதி, 8:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாதார நிகழ்ச்சிகள் நடந்தது. 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 3ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், காலை 5:00 மணிக்கு அருள்மிகு சக்தி விநாயகர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், சிறப்பு கும்ப பூஜை யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அருள்மிகு சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள், கோபுர விமான மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. தேரை கூடலூர் டி.எஸ்.பி., வசந்தகுமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் ஊர்வலம் மேல்கூடலூர் மாரியம்மன் கோவில், சுங்கம் முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில், கோழிக்கோடு சாலை டி.கே., பேட் வரை சென்று, நேற்று, அதிகாலை 3:30 மணிக்கு கோவில் வந்தடைந்தது. தொடர்ந்து தீபதாரணை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.