அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே காந்திகிராமத்தில் மாரியம்மன் கோயில் மாசி உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.
மார்ச் 6ல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கலச அபிஷேகத்துடன் விழா துவங்கியது. அன்று மாலை முல்லை பாசன கால்வாயிலிருந்து அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலமாக கோயில் வந்தனர்.
மார்ச் 7ல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மார்ச் 8ல் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகளை பூஜாரி பழனிச்சாமி செய்தார்.