முதல்வர் திறந்து வைத்தும் ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு வராத ஓய்வு கூடம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2026 05:03
ராமேஸ்வரம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும், ராமேஸ்வரம் கோயில் ஓய்வறை கூடம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர் பக்தர்கள் வசதிக்காக கோயில் நான்கு ரதவீதியில் இலவச ஓய்வறை கூடம், குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் மொபைல்போன், காலணிகள் பாதுகாப்பு அறைகள் உள்ளிட்ட பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கோயில் பகுதியில் இல்லை இதனால் தனியார் தங்கும் விடுதிகள், தனியார் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதால் கூடுதல் செலவீனம் ஏற்படுகிறது. ஆனால் ஏழை பக்தர்கள் இரவில் பக்தர்கள் கோயில் ரதவீதி சாலை ஓரத்திலும், அக்னி தீர்த்த கரையிலும் ஓய்வெடுத்து திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் ரூ. 1கோடி செலவில் கோயில் சன்னதி தெருவில் மொபைல் போன் மற்றும் லாக்கர் அறை வசதியுடன் ஓய்வறை கூட மற்றும் நான்கு ரதவீதியில் செல்ல புதிய பஸ் வசதி, கோயில் பிரசாதம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டு பிப்.,26ல் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அவசரகதியில் திறந்து முடக்கம் : ஆனால் முதல்வர் திறந்து வைத்து இன்றுடன் 20 நாட்கள் ஆகியும் மொபைல் போன் பாதுகாப்பு அறை, லாக்கர் வசதி உள்ளிட்ட பக்தர்களின் ஓய்வறை கூடத்தை இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் முடங்கி கிடக்கிறது. இங்கு மொபைல் போன் வைக்க கணினி வசதி மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தாத நிலையில், மக்களிடம் பெயர் வாங்கிட அவசரகதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து இன்றுவரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராமலே முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் காலணிகள் மற்றும் மொபைல் போன்களை வைக்க முடியாமலும், ஓய்வறை கூடம் இன்றி ரதவீதி சாலை ஓரத்தில் பக்தர்கள் அமர்ந்து சுகாதாரக் கேடுடன் சாப்பிடும் அவல நிலை உள்ளது. மேலும் பக்தர்கள் விட்டுச் செல்லும் காலணிகள் கோயில் கிழக்கு, வடக்கு, தெற்கு நுழைவு வாசல் முன்பு குப்பைகள் போல் சிதறி கிடக்கிறது. இதனை பக்தர்கள் தேடி எடுக்க முடியாமல் விட்டு செல்வதால், இறுதியாக நகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ளும் லாரியில் எடுத்துச் செல்கின்றனர். 5 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஒரு சதவீத அடிப்படை வசதி கூட நிறைவேற்றாமல், காணிக்கை வசூலிப்பதிலே குறிக்கோளாக இருந்த தமிழக அரசு, பெயரளவுக்கு திறந்து வைத்து அதுவும் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.