சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர், சுந்தராஜ பெருமாள் கோயில்களின் சித்திரை திருவிழாவில், சுவாமி கள்ளழகராக பூப்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.
சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப். 28ல் நடந்தது. மே 1ல், சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கினார். சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், சுவாமி பச்சைப்பட்டு உடுத்தி வெள்ளி குதிரை வாகனத்தில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்கினார். இவற்றைத் தொடர்ந்து மண்டகப்படிகளில் எழுந்தருளல், மோகினி அவதாரம் எடுத்தல் நடந்தது. இன்று பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டுத்திருவிழா நடந்தது. காமயசுவாமி கோயிலில் இருந்து, கள்ளழகா் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் பிருந்தாவன தோப்பிற்கு ராம அழகர் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்கள், நாணயங்கள், மாதுளை, திராட்சை பழங்கள் ஆகியவற்றை சுவாமிக்கு, காணிக்கையாக சமர்ப்பித்தனர். மேட்டுப்பட்டியில் சுந்தராஜ பெருமாள், பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.