சென்னை: வடபழனி முருகப்பெருமான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை, வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா மே 21ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாள் பிரம்மோத்சவ விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலி்ததார். விழாவில் 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தேய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா , 25ம் தேதி நாக வாகனத்தில் சுப்பிரமணியர், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோத்சவத்தின் முக்கிய நாளான, இன்று 27ம் தேதி காலை தேர் திருவிழா நடைபெற்றது. இன்று காலை 7:05 மணி முதல் 7:25 மணிக்குள் பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து வழிபட்டனர். இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. குதிரை வாகன புறப்பாடு, 28ம் தேதி நடக்கிறது. 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி விசாகமான, 30ம் தேதி காலை 7:35 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 9:00 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெறுகிறது.