பதிவு செய்த நாள்
27
மே
2026
06:05
விருத்தாசலம்: மங்களநாயகி அம்மன் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம்பிடித்து தேரை இழுந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில், பழமை வாய்ந்த மங்களநாயகி அம்மன் கோவிலில், வைகாசி மாதப் பெருவிழா, கடந்த 12ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தினசரி அம்மன் ரிஷபம், குதிரை, காமதேனு, யானை உள்ளிட்ட சிறப்பு வாகனங்களில் அமர்ந்து வீதியுலா வந்து அருள்பாலித்தார். மேலும், கடந்த 23ம் தேதி பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார் வழியாக கோ.பூவனுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அம்மன் சென்று ஆசிபெறுதல், 24ம் தேதி காலை கர்னத்தம் கிராமத்தில் அண்ணன் வீட்டிற்கு சென்று வருதல் உள்ளிட்ட ஐதீக நிகழ்ச்சிகள் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, மங்களநாயகி அம்மன் கோவில் வாசலில் எருமை கிடா பலியிடப்பட்டு, உற்சவ மூர்த்தி மேளதாளங்களுடன் புறப்பட்டு, தேரில் எழுந்தருளியது. பின்னர், தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்ததும், மகிஷா வாகனத்தில் மங்களநாயகி உற்சவர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கிராம மக்கள் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி, அன்னதானம் நடக்கிறது. எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமயில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.