பதிவு செய்த நாள்
28
மே
2026
09:05
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஜோகிபட்டியில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த யோகி மற்றும் அவருடைய மனைவியின் நடுகல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
திண்டுக்கல் வரவேற்பு ஆய்வு குழு வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரன், பெருமாள்சாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: ஜோகிபட்டியில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யோகி மற்றும் அவருடைய மனைவியின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆண் யோகி தலைமுடி முடிந்து இடதுபுறம் சரிந்த கொண்டை, நெற்றியில் தலையைச் சுற்றி ருத்ராட்ச மாலை, ருத்ராட்சம் அணிந்த காது, இருகையும் கூப்பி நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் கை மணிக்கட்டு, தோள்களில் ருத்ராட்ச வளையம், இடையை சுற்றிய கச்சை, முழங்கால் வரை இடையாடை, கால்களில் தண்டை அணிந்து நிற்கிறார். பெண் யோகி வலது புறம் சரிந்த கொண்டை, காதில் காதணி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, இரு முழங்கைகளில் மணிக்கட்டில் ருத்ராட்சம் அணிந்து இரு கையும் கூப்பி வணங்கிய நிலையில் இடையில் கச்சை, இடையாடை கீழ் கெண்டைக்கால் வரை சுருள் ஆடை, கால்களில் தண்டையும் கொண்டு இருவரும் வணங்கிய நிலையில் உள்ளனர். இருவருக்கும் நடுவில் சூரியன் சந்திர உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் யோகி என்பது ஜோகி என் பொருள்படும். கணவன் மனைவி இருவரும் சிவயோகியாக இருந்துள்ளனர் இவர்களில் பெயராலேயே ஜோகிபட்டி என்று இவ்வூருக்கு பெயர் வந்துள்ளது.